தங்கத்தில் முதலீடு என்பதை விட தங்க பத்திரமே சிறந்தது.


நீங்கள் தங்கம் நகைகள் வாங்க வேண்டும் என்றால் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம், அணிவதற்கு நகையும் கிடைக்கும் ஒரு முதலீடு ஆகவும் இருக்கும். ஆனால் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற சிந்தனை இருந்தால் அதற்கு பதில் தங்க பத்திரம் வாங்குங்கள் இதுதான் மிகச்சிறந்த தங்கத்தின் மீதான முதலீடாகும்.

பொதுவாக நீங்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்யும் போது சில வருடங்கள் கழித்து அதன் விலை உயரும் என்று நினைத்து தான் முதலீடு செய்திருப்பீர்கள். நிச்சயமாக தங்கத்தின் விலை சில வருடங்கள் ஆகும் போது உயரத்தான் செய்யும். ஆனால் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் நகை பழைய தங்க நகையாக இருக்கும்.

அதை மதிப்பிடும்போது பழைய தங்கம் என்றுதான் மதிப்பீடு செய்வார்கள். எனவே நீங்கள் அதனை விற்பதாக இருந்தால் அப்பொழுது என்ன தங்கத்தின் விலையோ அதை விட குறைவான அளவிலேயே உங்களுக்கு பணம் கிடைக்கும்.

ஏனென்றால் தங்க நகைகளை நீங்கள் வாங்கும் போது அதற்கான செய்கூலி மற்றும் சேதாரம் ஆகியவற்றையும் சேர்த்து தான் வாங்கி இருப்பீர்கள். எனவே நீங்கள் திருப்பி விற்கும் போது செய்கூலி மற்றும் சேதாரம் சேர்த்து நீங்கள் வாங்கிய பணம் எதுவும் கணக்கில் கொள்ள மாட்டாது. அன்றைய காலத்தில் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பை விட சற்று குறைவாகவே வாங்கிக் கொள்வார்கள்.

நீங்கள் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யும் போது 8 ஆண்டுகள் கழித்து அன்றைய தங்கத்தின் மதிப்பு என்னவோ அதற்கான பணமும் மேலும் வருடத்திற்கு இரண்டு முறை என 100 ரூபாய்க்கு 2.5 சதவீதமான வட்டியும் சேர்த்து உங்களுக்கு கிடைக்கும். அப்படி கிடைக்கும் அந்த பணத்திற்கு மூலதன ஆதாய வரி என்பது கிடையாது.

எனவே எட்டு வருடங்கள் கழித்து தங்கத்தின் மதிப்புக்கான தொகையும் அதற்கான நீங்கள் வாங்கும் போது செலுத்திய பணத்திற்கான வட்டியும் சேர்த்து வரியில்லாமல் பெறுவீர்கள். அரசாங்கம் ஏன் இப்படி வரி இல்லாமல் வட்டியுடன் உங்களுக்கு பணம் தர வேண்டும் என்று நினைக்கலாம்.

இந்தியாவில் அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது ஆனால் ஏற்றுமதி செய்வதில்லை. இதனால் அந்நிய செலவாணியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே போல இந்தியாவின் மக்கள் நலத் திட்டங்களுக்காக உலக வங்கியில் இருந்து கடன் வாங்க வேண்டி இருக்கிறது.

இதுபோன்று மக்களிடம் பெரும் பணத்தை எட்டு வருட காலம் வைத்திருந்தால் அதை மக்கள் நல பணிக்காக முதலீடு செய்ய முடியும். அதே சமயத்தில் உலக வங்கியில் திருப்பி செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டி தொகையும் செலுத்த வேண்டியிருக்கும் அதற்கு பதிலாக இந்திய மக்களுக்கே அந்த வட்டி தொகையை கொடுப்பதால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்கின்ற அரசின் பொருளாதார நோக்கம் தான் காரணம்.

ஐந்து வருடங்கள் கழித்து இந்த தங்கப் பத்திரத்தை நீங்கள் விற்று  பணமாக்க முடியும் ஆனால் அப்பொழுது உங்களுக்கு வட்டியாக கொடுக்கும் பணத்திலிருந்து வரி தொகை பிடித்தம் செய்யப்படும். வட்டி தொகையிலிருந்து தான் வரி வசூலிக்கப்படுமே தவிர நீங்கள் மூலதனமாக செலுத்திய பணத்தில் அன்றைய தங்கத்தின் மதிப்பில்  இருந்து வரி வசூலிக்க படாது.

இதை நீங்கள் எட்டு வருடங்கள் கழித்து முதிர்ச்சி அடைந்த பிறகு விற்றால் நீங்கள் வாங்கிய பணத்திற்கு அப்போது இருக்கும் தங்கத்தின் மதிப்பிற்கான பணம் மற்றும் வட்டிக்கான பணம் என எதற்கும் வரி கிடையாது. ஒரு தனி நபர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை 24 கேரட் தங்கத்தின் மதிப்பிற்கான தங்க பத்திரத்தை வாங்கிக் கொள்ள முடியும். அதுவே கூட்டுக் குடும்பம் என்ற அடிப்படையில் வாங்கினால் 20 கிலோ அளவிலான தங்க பத்திரத்தை உங்களால் வாங்கிக் கொள்ள முடியும்.

டிமேட் அக்கவுண்ட், வங்கி மற்றும் தபால் நிலையங்களில் நீங்கள் தங்க பத்திரங்களை குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் வாங்கிக் கொள்ள முடியும், பங்குச்சந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டிமேட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த தங்க பத்திரத்தை விற்க முடியும்.

தபால் நிலையங்களில் குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்த தங்க பத்திரம் வழங்கப்படுகிறது. பொதுவாக ஒரு நிதியாண்டு முடிகின்ற காலகட்டங்களில் வழங்கப்படுகிறது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் பொதுவாக தங்க பத்திரங்கள் வாங்குவதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்படும்.

இதைப் பற்றிய அறிவிப்புகள் வரும்போது நீங்கள் தபால் நிலையங்களில் உங்களது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற சான்றுகளை கொடுத்து பெற்றுக் கொள்ள முடியும்.

தங்கப் பத்திரம் நீங்கள் வாங்கியதற்கான சான்றுகள் உங்களுக்கு கொடுக்கப்படும். அவை தொலைந்து விட்டாலும் மீண்டும் நீங்கள் உங்களது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற அடையாள அட்டையை கொடுத்து திருப்பி வாங்கிக் கொள்ள முடியும்.

ஐந்து வருடங்களுக்கு மேல் ஐந்து, ஆறு அல்லது ஏழு வருடங்கள் என நீங்கள் இந்த தங்க பத்திரத்தை பெற்று உங்களது வங்கி அல்லது தபால் நிலைய கணக்குகளில் பணமாக பெற்றுக் கொள்ள முடியும்.

தங்கம் வைத்திருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அதை அடகு வைத்து பணம் வாங்கிக் கொள்ளலாம் ஆனால் தங்க பத்திரத்தில் முதலீடு செய்து விட்டு இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

ஏனென்றால் இந்த தங்க பத்திரத்தை நீங்கள் வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்ள முடியும். இதை ஒரு சொத்தாக மற்றும் தங்கம் போன்று மதிப்பீடு செய்யப்படுகிறது. அதனால் இதில் நீங்கள் அதிகளவு பணத்தை முதலீடு செய்தீர்கள் என்றால் அதைக் கொண்டு நீங்கள் கடன் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

நீங்கள் இந்த தங்க பத்திரத்தை வாங்கும்போது உங்களது சான்றுகளுடன் சேர்த்து இதற்கான நாமினி யார் என்பதையும் இணைத்துக் கொள்ளவும் முடியும்.

ஒரு வேளை எட்டு வருடங்கள் கழித்து தங்கத்தின் மதிப்பு குறையும் பட்சத்தில் இது பலன் தராமல் போகலாம். ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தங்கத்தின் மதிப்பானது உயர்வது தான் வழக்கம். அப்படி குறைந்தால் கூட இதற்காக கொடுக்கும் வட்டியின் மூலம் நீங்கள் நஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஆக மொத்தம் மத்திய அரசின் இந்த சவரின் தங்க பத்திரம்  திட்டமானது நல்ல பலன் அளிக்கக் கூடியது. 8 ஆண்டுகள் வரை நீங்கள் முதலீடு செய்தீர்கள் என்றால் அன்றைக்கு தங்கத்தின் மதிப்பிற்கான பணமும், நீங்கள் முதலீடு செய்த பணத்திற்கான வட்டியுடன் சேர்த்து உங்களது வங்கி அல்லது தபால் நிலைய கணக்குகளில் பணமாக பெற்றுக் கொள்ள முடியும்.

தங்க நகையாக அல்லது காசுகளாக வைத்திருப்பதை விட இது போன்ற பத்திரமாக வைத்திருப்பது உங்களுக்கு மேலும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

இதையும் வாசிக்க: தமிழகத்தில் அதிகமான புதிய தொழில் தொடங்குவதற்கான காரணங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை